பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் கனவு வானூர்தியான “போயிங் 787 டிரீம்லைனர்’ வானூர்தி ( Boeing 787 Dreamliner ) நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.
உலகின் அதிநவீன, சொகுசு வானூர்தி என்று அழைக்கப்படும் இந்த வானூர்தி அடுத்த சில நாட்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்த கனவுலக வானூர்தித் திட்டம் குறித்து போயிங் நிறுவனம் அறிவித்தது. ஆனால், இந்த புதுமையான வானூர்தி திட்டமிட்டபடி வெளிவரவில்லை. அதிக விலையும், குறைவான முன்பதிவுகளும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், மூலப் பொருட்கள் பற்றாக்குறை, அதிக எடை, இறக்கைகளை பொருத்துவதில் ஏற்பட்ட தொழில் நுட்பசிக்கல் போன்றவைகளும் 'டிரீம்லைனர்’ வானூர்தி தாமதமானதற்கு காரணங்கள் ஆகும்.
இத்தனை தடைகளையும் தாண்டி, நேற்று இந்த வானூர்தி வெள்ளோட்டம் விடப்பட்டது. முதற்கட்டமாக, பத்திரிகையாளர்கள் இந்த வெள்ளோட்டத்தின் போது வானூர்தியில் பயணித்தனர். “டிரீம்லைனர்’ விமானம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. உயரம் அதிகம் கொண்ட கேபின், அமர்ந்திருப்பதே தெரியாத அளவிற்கு மெத்தை போன்ற இருக்கைகள், கண்களைக் கவரும் பல வண்ண விளக்குகள், மிக குறைந்த எரிபொருள் செலவு, நிறைந்த திறனும், குறைந்த சத்தமும் கொண்ட இயந்திரங்கள், பயணிகள் விண்ணைப் பார்த்து ரசிப்பதற்காக நீண்ட ஜன்னல்கள் என பல சிறப்புகள் இந்த வானூர்தியில் உண்டு.
இந்த வானூர்தி, சிட்னியில் இருந்து சிகாகோ வரையில் தரையிறங்காமல், தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஏர்பஸ் நிறுவனம் ஏ 380 என்ற உலகின் மிகப் பெரிய வானூர்தியை அறிமுகப்படுத்தியது. இந்த வானூர்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து முன்பதிவுககள் குவிகின்றன. இந்நிலையில், ஏ 380 ரக வானூர்திக்கு போட்டியாக போயிங் நிறுவனம் 'டிரீம்லைனர்’ வானூர்தியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ 380 வானூர்தியில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய முடியும். இதனால், நீண்ட தூர வானூர்தி சேவையில் ஏர்பஸ் ஏ 380 வானூர்திகள் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால் 'டிரீம்லைனர்’ வானூர்தியில் 290 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இருப்பினும் இரு நகரங்களுக்கு இடையிலான, சொகுசு பயணத்திற்கு 'டிரீம்லைனர்’ வானூர்தி ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எப்படியோ மிக நீண்ட தாமதத்திற்குப் பின், உலகின் கனவுலக வானூர்தி என்று கருதப்படும் 'டிரீம்லைனர்’ வானூர்தி அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகள் சேவைக்காக வெளி வந்துள்ளது.
படத்தின் மேல் அழுத்துங்கள் பெரிதாக தெரியும்....
போயிங் 787 வானூர்தியின் உள் தோற்றம்





























