இதுவரை பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படாது பரிசோதனைச் செயற்பாட்டிலிருக்கும் இந்த வாடகை வானூர்திகளை மிக விரைவில் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் முயற்சியில் நிபுணர்கள் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சாதாரண மகிழுந்துகள் (Cars) போன்று வீதியால் சென்று குறித்த விமான நிலைய ஓடுபாதையில் ஓடி வானில் பறக்கவல்லதுமான ஒரு வாகனமே வாடகை வானூர்தியாகும். ஒரு நாட்டின் வான் எல்லைகளுக்குட்பட்ட வானூர்திப் பறப்பு என்பது அந்நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. சாதாரண தரைவழிப் போக்குவரத்துப் போன்று வான்வழிப் போக்குவரத்தினை பொதுப்பாவனைக்காகத் திறந்துவிடுவதென்பது, ஒரு நாடு தனது பாதுகாப்பைத் தானாகவே முன்வந்து முடக்குவதற்கு ஒப்பானது. இதன்காரணமாக தகுந்த பாதுகாப்பு உத்திகளுடன் இந்த வாடகை வானூர்தியினை பொதுப்பாவனைக்காகக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் முயற்சிக்கின்றன.
- பிரதான பாரிய விமான நிலையங்களின் போக்குவரத்து நெருக்கடி குறையுவடையும்.
- சாலைப் போக்குவரத்தின் நெருக்கடி குறையுவடையும்.
- போக்குவரத்துத் திட்டமிடலைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
- சிறிய விமானங்களை இயக்குவதற்கான பொருட்செலவு குறைவடையும்.
பெரும்பாலும் ஒரு நாட்டிற்கு வரும் உல்லாசப்பயணிகள் அந்நாட்டின் விமான நிலையத்திலிருந்து தொலைதூர இடங்களிலுள்ள சுற்றுலாத்தளங்களுக்குப் செல்வது கிடையாது. இந்தத் திட்டம் செயற்படுத்தப்படும்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளும் விமான நிலையங்களைக் கொண்டிருக்கும். இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்கள் உருவாகின்றது.
NASA நிறுவனம் தன்னியக்கமாக விமானப் பறப்புக்களைக் கட்டுப்படுத்தும் Robotic Air Traffic Controller என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கருவி தரையிறங்குவதற்கு வரும் விமானங்களிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளிற்கேற்ப அவை தரையிறங்குவதற்குத் தேவையான தரவுகளைத் தன்னியக்கமாக வழங்கும். இன்னொரு வகைக் கருவி தரையிறங்குவதற்கு வரும் விமானங்களிலிருந்து கிடைக்கும் அவ்விமானங்களின் பறக்கும் உயரம், ஆள்கூறு என்பவற்றைப் பெற்று அவற்றுக்கான பதிற் தகவல்களை வழங்குவதுடன் அத்தகவல்களை ஏனைய விமானங்களுடனும் பகிர்ந்துகொள்ளும். இவ்வகைக் கருவிகளின்மூலம் ஆளணி எண்ணிக்கையைக் கணிசமானளவு குறைக்க முடியும்.
இவ்வகையான சிறியரக விமானப் போக்குவரத்துத் தொகுதிக்கான திட்டத்தின் ஆரம்ப நிலையில், இத்திட்டத்தை 2015 இல் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், ஆரம்பத்தில் சிறியளவிலேயே அவற்றைப் பயன்படுத்தக் கூடியதாகவிருக்கும். இவ்வகை வானூர்திகள் பெருமளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நாம் இன்னமும் காத்திருக்க வேண்டியேயிருக்கும்.
No comments:
Post a Comment