பழமொழி.....

Saturday, June 9, 2012

MI-24 உலங்கு வானூர்தி..



1972 ஆம் ஆண்டு தொடக்கம் சோவியத் விமானப்படையினால் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் உலங்குவானூர்தியானது தாக்குதற்திறன் மிக்கதாக இருப்பது மட்டுமல்லாது சிறு எண்ணிக்கையான துருப்புக்களையும் நகர்த்தவல்லது.



ஈழத்தில் இந்தியக் காடையர் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலேயே, அங்கு இவ் உலங்கு வானூர்தி தமிழ் மக்களுக்கு அறிமுகமானது. “முதலைக் கெலி" , "மூஞ்சுறு “ என்று இது தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய Mi- 24 உலங்குவானூர்தியில் தேசியத் தலைவர் அவர்களை புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்ட நிகழ்வானது இந்தியாவிற்கும் ஈழத்திற்க்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணம் ஆக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.


1960 களில். தாக்குதற் திறனுடன் கூடியதும் துருப்புக்களைக் காவிச்செல்லக் கூடியதுமானஉலங்குவானூர்திகளின் தேவை சோவியத்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான Mikhail Leont'yevich Mil என்பவரால் உணரப்பட்டது. ஆரம்பத்தில் சோவியத் படைகளின் பயன்பாட்டிலிருந்த UH-1A Huey என்ற உலங்குவானூர்தியின் வடிவத்தை ஒத்த வடிவமுடைய உலங்குவானூர்தியே Mil அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அவரது வடிவம் எட்டுத் துருப்புக்களைக் காவிச்செல்லக் கூடியதாகவும் இருபக்கங்களிலுமமைந்த இறக்கைகளில் மொத்தம் ஆறு ஏவுகணைகளைத் தாங்கிச்செல்லக் கூடியதாகவும் அமைந்திருந்தது. இது "பறக்கும் தாங்கி" என அழைக்கப்படுகிறது.




இரண்டு தாரை இயந்திரங்களால் இயக்கப்படும் இதன் பிரதான சுழலியானது (rotor) நான்கு சுழலித் தகடுகளையும் (rotor blade) வாற்சுழலியானது (tail rotor) மூன்று சுழலித் தகடுகளையும் கொண்டுள்ளன. துப்பாக்கி இயக்குபவரும் விமானியும் ஒருவர்பின் ஒருவராக தனித்தனி அறைகளில் (cockpit) அமர்ந்திருப்பர். இருபக்கங்களிலுமுள்ள இறக்கைகள் பலவகையான தாக்குதல் ஆயுதங்களைக் காவவல்லதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடவடிக்கையின் தன்மைக்கேற்ப இவ் உலங்குவானூர்தி ஆயுதங்களைக் காவிச்செல்லவல்லது.



இவ் உலங்குவானூர்தியின் உடற்பகுதி மற்றும் சுழலித் தகடுகள் 50 கலிபர் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கக் கூடியவாறு காப்பிடப்பட்டுள்ள அதேவேளை அதன் விமானியறைகள் 37 மில்லிமீற்றர் கனரக துப்பாக்கித் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கவல்லது. வேகமான பறப்பின்போது இதன் சிறப்பான வடிவமைப்பையுடைய இறக்கை உலங்குவானூர்திக்குத் தேவையான மொத்தத் தூக்குசக்தியின் (lift) 25 வீதமான பங்கை வழங்குகின்றது.



1977 – 1978 காலப்பகுதியில் எதியோப்பியப் படைகள் சோமாலியர்களுக்கு எதிராக நடாத்தியயுத்தத்தில் இவ் உலங்குவானூர்திகள் முதன்முதலாக எதியோப்பியப் படைகளுக்கு ஆதரவாகக் களமிறக்கப்பட்டன. அதன் பின்னர் கம்போடிய-வியட்னாமிய யுத்தம், லிபிய யுத்தம் மற்றும் சோவியத்துடனான ஆப்கானிஸ்தான் யுத்தம் என்பவற்றில் இவ் உலங்குவானூர்திகளின் பங்கு கணிசமாகதாக இருந்தது. சிறிலங்கா போரைப் பொறுத்தளவில், ஈழத்தில் இந்தியக் காடையர் படை இவ்வகை உலங்குவானூர்திகளை 1987 – 1990 காலப்பகுதியில் பயன்படுத்தியிருந்தனர். 1995 ஆம் ஆண்டு இவ்வகை உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப் படையிலும் இணைத்துக்கொள்ளப்பட்டு தமிழருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.


1979 ஏப்ரல் மாதத்தில் ஆப்கான் படைகளுக்கு Mi-24 வகை உலங்குவானூர்திகள் சோவியத்தால் வழங்கப்பட்டது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளின் படைகளால் பயன்படுத்தப்படும் இவ்வகை உலங்குவானூர்திகள் சமர்க்களங்களில் அவற்றின் திறனை நிருபித்துள்
ளன.


No comments: